Tuesday, November 28, 2006

இது கவிதையல்ல


எழுத துவங்குகிறேன்
கவிதையொன்றை...
கசக்கி எறிந்த
காகிதங்களின் குப்பை மேட்டில்...
என்னையும் கசக்கி விடாதே
காகிதத்தின் கோரிக்கை
கடந்து செல்கிறது என்னை...
மீண்டும் ஏதோ எழுதுகிறேன்
நிச்சயமாய்
இது கவிதையல்ல
உன்னோடு ஒப்பிட்டால்...

Monday, November 20, 2006

காதல் முறித்தாய்



உன்னிடம் என்காதல் நெஞ்சை திறந்தேன்
எல்லை தாண்டியதின் அச்சம் என்னுள்
பயந்தது நடந்தது இதயம் அறுத்தேகினாய்
விருப்பு இல்லை வெறுப்பு மட்டுமென்றாய்

காதல் முறித்தாய் காரணம் அடுக்கினாய்
நேசம்கொள எதுவுண்டு உன்னிடம் என்றாய்
இதயம் இருதுண்டாக இன்னுயிர் கிழித்தாய்
என்சொல் யாவும் கேட்காது தவிர்த்தாய்

உள்ளம் நிறைந்த காதல் உண்டென்றேன்
உலகில் வாழ அதுபோதா தென்றாய்
உயிருருக உள்ளம் உடத்து சென்றாய்
உன்னை அகன்று யாது செய்வேன்

விட்டு விலகி நின்றேன் நானும்
விடை கொடுத்தேன் சென்று வாவென
இன்று செல்கின்றாய் என்னை தனியனாக்கி
இனிசெய்வது யாதென திகைக்கும் எனைநீங்கி

என்காதல் உண்மை அதுஎன்றும் காட்டாறு
நீயின்றியும் நினைவு ஊற்றில் நீடித்திருக்கும்
என்றேனும் உன்இறுகிய இதயம் திறக்கும்
காத்திருக்கும் என்காதல் அதைதிறக்க வைக்கும்

திரும்பி வருவாய் நம்பிக்கை என்னுள்
திசைபார்த்து நிற்கிறேன் நீவர வேண்டி
வரும்வழி யெங்கும் பூத்தூவி நின்றேன்
காதல் நிஜமெனில் கட்டாயம் வருவாய்





Sunday, November 19, 2006

பின்னிருக்கை அமர பிறந்தவள்

பத்து நிமிடம்
துடைக்கிறேன்
எனது வண்டியின்
பின்னிருக்கையை..
ஏனென்று நீயறிவாய்..


***************

ஏனென்று
தெரியவில்லை
நீ அமர வேண்டி
தவமிருக்கிறது எனது வண்டி

***************

பின்னிருக்கையில் நீ..
வேகத்தடையின்றி
நீளும் சாலை..
வெறுத்து போகிறது
என் மனம்.


**************

Monday, November 13, 2006

மழலையர் தினம்

கான்வென்டில் சேர்த்துவிட்டு
கனவு காணும் பெற்றோர்..

இரண்டாம் வகுப்புக்கு
இருபதாயிரம் வாங்கும் பள்ளிகள்..

கொதிக்கும் வெயிலில்
ஷூ அணிந்து
டை இறுக்கி
ஆட்டோக்களில் அடுக்கப் படும்
இளந்தளிர்கள்...

வருடம் முழுதும்
பொதியேறிய முதுகுகளுக்கு
இன்றாவது ஓய்வு...

காந்தியாய், நேருவாய்
வேடமணிந்து
விழிக்கும் சிறுவர்கள்...

திணித்தல் தொடருமட்டும்
குழந்தைகள் தினத்தில்
அர்த்தம் இல்லை...

விழியில் வழிந்த நீர்

விடை பெற்றுப் போகின்றேன்
உனது
விழியில் வழிகிறது நீர்..
விரைவில் சந்திப்போம்
என்று தெரிந்த பின்னும்..

உன் கண்ணீர் முத்துக்களை
சேர்த்து எடுத்து
என் நினைவு நூலால்
கோர்த்து செல்கின்றேன் நான்..

மீண்டும் ஒருமுறை
என் பிறப்பெனில்
உன் கண்ணீராக...
உன் இதயத்தில்
உருப்பெற்று..
கண்ணில் கசிந்து
கன்னம் தடவி
உதட்டில் உயிரிழப்பதற்காய்....

கற்றது காதலளவு

நானறியாமல்
என்னுள் நுழைந்தாய்..
என்னையே
நானறியச் செய்தாய்..
உன்னையறிந்ததால்
உலகறிந்தேன்..
என் உலகமே
நீயானேன்.

Sunday, November 12, 2006

இலவசமாய் ஓர் இதயம்..

உனக்காக இதோ
இலவசமாய் ஓர் இதயம்..

இதயம் தந்து
இதயம் கொள் என்று
இடமாற்றம் செய்யவில்லை..

உன் காதலை வேண்டி
இதை தரவில்லை..
இலவசத்தின் பின்
மறைந்திருக்கும் ஏதும்
இதிலில்லை...
முற்றிலும் இலவசம்.

மறுத்தாலும் வெறுத்தாலும்
இது உனக்கே உனக்கென..
உறுதியுண்டு
உத்தரவாதமுண்டு
உடனே கொள்வாய்.

என்னுள் இழைந்தவளே
இதம் தந்து
இன்னுயிரில் கலந்து
இறுகி இறுதிவரை
இவள் என்னவளென
உள்ளெழுந்த உணர்வால்
இது உனக்கு சமர்ப்பணமாய்..

தொலைந்தவன்

கனவினில் கண்ட முகம்

கலைந்தது கனவு
கனவினில் கண்ட முகம்
கண்ணெதிரே தோன்றவில்லை....
காதலியை காணாத
காலைப் பொழுது போல்
கொடுமையானது வேறு இல்லை...



தொலைந்தவன்

நீயன்றி
தொலைவினில்
தொலைந்தவன் நான்
உன் நினைவுகளின்
தொல்லையைத்
தொலைக்க முடியவில்லை..



அறைபடும் கதவுகள்

வெளியே நிற்கிறேன்..
கதவுகளை அறைந்து செல்கின்றாய்..
விலகாமல் நிற்கிறேன்
கதவினை கவனித்தபடி..
அன்பிற்கும் உண்டோ
அடைக்குந் தாழ்...
எனது அன்பு நிஜமெனில்
தானாய்த் திறக்கும் கதவுகளென..

உனது மறுதலிப்பை
மறுதலிக்கிறேன்
மறுமுறை பரிசீலனை செய்..
மனக்கதவை திறப்பதற்கு.

மண்ணிறங்கிய தேவதை

நீ இல்லாத நாட்கள்
நீண்டு கொண்டு இருக்கின்றன..
நீர்கொண்ட மேகமென பொழிந்த
நினது அன்பில்
நனைந்தவன் நான்..

உனது பெயரை
உன்னெதிரெ
உச்சரிக்க முடியாத
உதடுகள்..
உள்ளுக்குள் உயிர்வதை..
உயிர்ப்பிக்க உடனே வா..

பிரிவு என்
பிரியத்தை பிரிக்கவில்லை..
பிறரரியாமல் பிளந்து
பரிதவிக்கும் பித்தமனம்..
பிரியவிருக்கும் உயிர்
பிடித்து நிறுத்த பறந்து வா..

மண்ணிறங்கிய தேவதையாய்
மனதில் நிறைந்தவளே..
மின்னி மறைந்து
நின்றாய்
மீளாத்துயரில் நான்
மீட்பதற்காய்
மீண்டும் வா....

Saturday, November 11, 2006

வானவில்லாய் வந்தவள்



வானவில்லாய்

வானவில்லாய் என் வானில்
வந்தாய்...
மனம் மகிழாமல்
வருத்தம் கொண்டது..
வானவில் போல் விரைந்து
கலைந்து போவாய் என..


நான்.......

அவள் காதலை
யாசித்தவன்
அவள் பெயரை
சுவாசித்தவன்
அவள் வழித்தடங்களில்
வசித்தவன்
அவள் நெஞ்சை
நேசித்தவன்
அவள் ஒருகவிதையென
வாசித்தவன்
.......
நான் தொலைந்து
அவளாய் ஆனவன்......

உனது இன்மை

உனது இன்மை

அந்தி சாய்ந்ததும்
ஆளரவமற்ற தெருக்கள்
அடிக்கும் குளிர்காற்று
உடலை கிழிக்க
உள்ளம் கிழிக்கும்
உனது இன்மை...

உறையும் பனியில்

இலைகளின் இறுதி ஊர்வலத்தின்
மீது ஊர்ந்து வந்தது
குளிர் காலம்
உறையும் பனியில்
உனக்காக உருகும் உள்ளம்.



வழியெங்கும்

வழியெங்கும் வாடிய இலைகள்
வண்ணமிழந்து குப்பையாய்
உன்னை எண்ணி
எண்ணமிழந்த
என்னைப் போல....

Friday, November 10, 2006

காற்றில் கரைந்த கவிதைகள்

உன்னை கண்ணுறும்போது
தோன்றும் கவிதைகள்
காகிதத்தில் எழுதாத
காரணத்தால்
காற்றில் கலந்து
கரைகின்றன...
கவிதையாய் நீ அருகிருக்க
கவிதைகளே தேவையில்லை..
காணாத போது
காகிதம் தேடும் நான்.....

தாழ்வு மண்டலம்



காத்திருந்தேன்..
கண்டு கொள்ளாது..
கடந்து சென்றாய்..
என்னுள்
காற்றழுத்த தாழ்வு மண்டலம்..

சேதாரங்களை சரிசெய்து
காத்திருக்கிறேன்..
மீண்டும் வந்து
கரை கடப்பாய் என்று..


கதவிலக்கம் 28

கடக்காமல் நின்றன
கால்கள்
கதவிலக்கம் 28

நானாக வரவில்லை
போகும் வழிதான்
வேறுவழி போயிருக்கலாம்..

நின்று முகம் தேடுகிறேன்..
நீ இருக்கிறாயா என்று..
மறுதலித்த பின்பும்
மறக்காத நெஞ்சம்..

அணில் குதித்த
சத்தத்தில் அதிர்ந்து
அகன்று போகின்றேன் நான்..


எதிர்ச்செயல்

ஒவ்வொரு செயலுக்கும்
எதிர்ச்செயல் உண்டு
பொதுவிதி..

உன்மீது என் காதல்
எதிர் செயலாய்
என்மீது உன் காதல்..
ஏனில்லை ?

பொது விதி பொய்த்ததோ ?
புரிந்தது.. பொய்க்கவில்லை..

உன்மீது என் காதல்
எதிர் செயலாய்
என்மீது உன் வெறுப்பு.

பேசாத வார்த்தைகள்



நீண்ட பிரிவின் பின்வந்த சந்திப்பு
பேச நிறைய இருந்தது..
ஆனால் பேசவில்லை..
என்ன பேச.. எதைப் பேச..
பேசாத வார்த்தைகள்
இருவருக்கும் இடையே பேசிச்சென்றது..

மெளனம் மிகப்பெரும்
பாறையாய் இருவருக்கும் இடையே..
இறுதியில் அதை கரைத்தது
உனது கண்ணீர்..

தேடிக் கொண்டிருக்கிறேன்





தேடிக் கொண்டிருக்கிறேன்.. யுகங்களாய்..
எதையென்று தெரியாமல்..

வெறுமையின் விளிம்பில் நான்
வெற்றிடத்தை எது நிரப்பக் கூடும்..

கனவுகள் கண்டு எழுந்ததாய் உணர்ந்தேன்..
இதுவும் ஓர் கனவோ..

காணும் காட்சிகள்
கண்முன் கலைந்து போக
வந்த வழி மறந்து போனது...
போகும் திசை தேடுகிறேன்..

எது தொலைந்தது..
எதை தேடிய பயணம் இது..
என்று புறப்பட்டேன்..
கடந்த தொலைவினால்
கதறும் கால்கள்..

மீண்டும் மீண்டும் அதே பாதை
தொடங்கிய இடத்திற்கு திரும்பி
தொடரும் பயணம்..

தேடிக் கொண்டிருக்கிறேன்.. யுகங்களாய்..
எதையென்று தெரியாமல்..